ஓரு நாள் தபஸ்யோகியிடம் “கான்ஸ்ட்ரெண்டேஷனுக்கும் (தாரணை) மெடிட்டேஷனுக்கும் (தியானம்) இடையே என்ன வேறுபாடு” என்று கேட்டேன். இது தியானப் பயிற்சி பெறுவதற்கு முன்.
“இடமே வேற; டெக்னிக்கே வேற” என்று மட்டும் சொன்னார்.
(பிறகு, ஸ்வாமி விவேகாநந்தரின் “Raja Yoga” புத்தகத்தில் கண்டது:
Continued concentration is meditation)
தியானம் (meditation) பயிற்சி:
சாந்தி யோகம் பெற்றவர்கள் சில வாரங்களில் தியானப் பயிற்சிக்குத் தயார்.
மீண்டும் சி. கே. எஸ் தியானத்தில் உட்கார்ந்து, தியானம் செய்தபடியே
நம்மிடம் வந்து மூலாதாரத்திலிருந்து ஸகஸ்ராரத்திற்கு (தலை உச்சிக்கு)
சக்தியை எழுப்பிவிடுவார். தலையைச் சுற்றிஅவர் விரல்கள் செல்லும்.
அதன் பிறகு தியானம் செய்யும்போது நேரடியாக ஸஹஸ்ராரத்திற்குச் சென்று,
தியானிக்க வேண்டும்.
இந்த தியானமுறையைப் பல வாரங்கள் பழகி வந்தேன். தினம் மாலையில்
நடந்து சென்று மற்றவர்களுடன் சேர்ந்து தியானம் செய்து வந்தேன்.
பல மாதங்கள் இது தொடர்ந்தது. சுமார் 20 பேர் சேர்ந்து தியானம் செய்வோம்.
ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டது கிடையாது. பயிற்சி/தியானம்
செய்ய வருவோர் அநேகமாக 30 வயதுக்குள்தான் இருக்கும். ஓரிரண்டு பேர்கள் 50 வயதினராக இருக்கலாம். அங்கு பயிற்சி/தீக்ஷை பெற்றவர்களில் அந்நாளில் சற்றுப் பிரபலமாக இருந்த எழுத்தாளர் "ஆர்வி" - கலைமகளில் தொடர் கதை எழுதியிருக்கிறார். அவர் ஒரு முறை வந்த போது பார்த்திருக்கிறேன்.
தபிஸ்யோகி வேதாந்த தத்துவங்கள் பற்றிப் பேசியதாக நினைவில்லை. அவ்வப்போது அவர் உதிர்த்த சில சிறப்பு மொழிகள்:
1. இரவு படுக்குமுன் சாந்தி யோகம் செய்துதான் படுக்கவேண்டும். (அதாவது "மூலாதாரத்தில்" மனத்தைக் குவித்திருக்க வேண்டும்).
2. வாரம் ஒரு நாள் சாந்தி யோகம் செய்யவேண்டும்.
3. உடல் நலமில்லாத சமயம், காய்சசல் இருந்தால், தியானம் செய்யக்கூடாது கூடாது.
4. நாட்டுப்புறங்களில் நீச்சல் கற்பிக்கப்படும் முறை பற்றி பல முறை சொல்லியிருக்கிறார். அதாவது நீச்சல் கற்றுக்கொள்ள வந்தவரை தண்ணீரில் தள்ளி விடுவார்கள். அது போல் ராஜ யோகமும் நேரடியாகக் குதித்து விடவேண்டும் என்பது மறைமுகம்!
5. ஒளவையாரின் விநாயகர் அகவல் ராஜயோகப் பயிற்சி மூலம் குண்டலினி சக்தியை எழுப்புவது பற்றியே என்பார்.
பிறகு அலுவலில் அவrகோவைக்கு மாற்றப்பட்டார். அதன் பின் மாதம் ஒரு முறை சென்னை வருவார். அச்சமயம் இராய்ப்பேட்டை வூட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்குவார். அங்கு போய் அவருடன் பல சிஷ்யரும் சேர்ந்து தியானம் செய்வோம்.